பத்தாம் நூற்றாண்டு ..
காலம் காலமாக தமிழகம் சேர, சோழ பாண்டிய மன்னர்களால் சமபங்காக ஆளப்பட்டு வந்த சூழ்நிலை மாறி சோழ மன்னர்களின் ஆதிக்கம் மேலே எழும்ப தொடஙகிய காலம்.விஜயாலய சோழன் , ராஜ ராஜ சோழன் , ராஜேந்திர சோழன் போன்ற வீர புத்திரர்கள் தமிழ் மண்ணில் கால் பதித்து நடந்த காலம். சோழ ராஜ்ஜியத்தில் நாட்டு நிர்வாகம் சீர்படுத்தப்பட்டு சோழ மன்னர்களின் நேரடி கண்காணிப்பில் கொணரப்பட்டது. இதில் முக்கியமாக வரி நிலுவை மற்றும் வசூல் செய்யும் அதிகாரம் குறுநில மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்டு சோழ மன்னனின் நேர் சேவையில் பணியாற்றும் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
வரி வசூலிப்பில் இந்த வழக்கம், அக்காலத்து சமூகத்தில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. தமிழக ஊர்களில் நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி வரி நிலுவை ஊர் தலைவர்களால் நியமிக்கப்பட்டு , அதில் ஒரு பங்கு அந்த பகுதியின் குறுநில மன்னனிடம் அளிக்கப்படும். அக்குறுநில மன்னனும் அப்பகுதியை சேர்ந்தவனானதால் வரி நிலுவைகளில் பெரிய கருத்து வேறுபாடுகள் இருக்காது. சோழ நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஊர் தர வேண்டிய வரிப்பணத்தை நாட்டு தலை நகரத்தில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இருப்பினும் சோழ நாட்டில் அதிகாரிகள் திறம்பட செயல்பட்டதால் வரிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. சோழ நாட்டை வலிமையான மன்னர்கள் ஆண்ட வரையில் இந்த அமைப்பானது சீராக செயல்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழன் காலத்தில் உருவான இவ்வமைப்பானது சுமார் ஆறு தலைமுறைகளாக ,அதாவது சுமார் இரு நூறு ஆண்டுகள் பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி வழக்கில் இருந்தது. அதன் பின்னர் வந்த சோழ மன்னர்கள் வலுவிழந்து இருந்ததனால் சோழ நாடு பொலிவிழந்தது .அதன் பின்னர் பல குறுநில மன்னர்கள் தற்காலிகமாக அதிகாரத்தை கைப்பற்றினாலும் , தமிழகத்தின் எல்லா பிராந்தியங்களையும் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போனது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது வரி நிர்வாகமாகத்தான் இருக்க வேண்டும். தினம் மூன்று முறை ஆடை மாற்றும் நடிக நடிகைகள் போல தமிழகத்தில் அரசர்கள் நித்தம் ஒன்றும் மாதம் ஒன்றுமாக மாறினர். அவ்வாறு மாறிய ஆட்சி நிர்வாகத்தில் அதிகாரிகள் மட்டும் நிரந்தரமாகவா இருப்பார்கள்? அவர்களும் மாறினர் அல்லது மாற்றப்பட்டனர்.
அவ்வாறு வந்த அதிகாரிகள் தம்மை பணியிலமர்த்திய மன்னனுக்கு தமது விசுவாசத்தை காட்ட வரிகளை பல மடங்கு உயர்த்தினர். இக்காலத்தில் இருந்து நமது ஊரமைப்புகள் மெதுவாக திறன் இழந்தன. வரிச்சுமை அதிகரித்ததால் ஊரின் பிற வேலைப்பாடுகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. காவல் , கொல்லர், கலைஞர்கள் என ஊர் பணியில் இருந்த சேவைக்காரர்கள் ஊர் கஜானாவில் பணம் இல்லாத காரணத்தால் வேலை இழந்தனர்.வருமானத்தில் பெரும்பாலான பகுதி மன்னனுக்கு சென்றதால் பெருவாரியான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். நாட்டு வளம் மன்னனின் கஜானாவிற்கு சென்று அதன் மூலம் தேவையற்ற போர்களிலும் படையெடுப்புகளிலும் செலவழிந்தது. இது கூட தேவலாம் என்று எண்ணக்கூடிய காலம் வந்தது..
அது...13 ஆம் நூற்றாண்டு...
கருத்துகள்
கருத்துரையிடுக